×

மறைமலைநகரில் பயங்கரம்; பாமக பிரமுகர் சரமாரி வெட்டி படுகொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

சென்னை, ஜூன் 13: மறைமலைநகரில் பட்டப்பகலில், பாமக பிரமுகர், மர்ம கும்பல் ஒன்றால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை அடுத்த மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் காளி (40). பாமக பிரமுகரான இவர், மறைமலைநகர் நகர வன்னியர் சங்க தலைவராக இருந்து வந்தார். மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் இவர் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது, பைக் மற்றும் காரில், பயங்கர ஆயுதங்களுடன் ஒரு மர்ம கும்பல் அங்கு வந்தது.

பின்னர், அக்கும்பல் திடீரென வாகனங்களில் இருந்து இறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் காளியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து, அந்த மர்ம கும்பல், தாங்கள் வந்த வாகனங்களில் ஏறி, அங்கு இருந்து தப்பி சென்றது. இந்த கொலை சம்பவத்தை பார்த்ததும் டீக்கடையில் இருந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நாலாபுறமும் அலறியடித்தவாறு சிதறி ஓடினர்.

தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காளியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், காளியை கொலை செய்தவர்கள் யார். எதற்காக கொலை செய்தார்கள், முன் விரோதம் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு நகரமன்ற துணை தலைவரும் பிரபல ரவுடியுமான ரவிபிரகாஷ் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் காளி தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.

அதனால், இந்த கொலை சம்பந்தமாக யாராவது அவரை பழிக்குப்பழி வாங்குவதற்காக தீர்த்துக்கட்டினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. தாம்பரம் மாநகர கமிஷனர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post மறைமலைநகரில் பயங்கரம்; பாமக பிரமுகர் சரமாரி வெட்டி படுகொலை: மர்ம கும்பல் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Karamalayanagar ,Bamakha Pramukhara ,CHENNAI ,Karamalai Nagar ,Bamakha Pramukhar ,Chennai… ,Bamakha ,
× RELATED மறைமலைநகரில் பைக் திருடிய மர்ம நபருக்கு போலீசார் வலை